(கனகராசா சரவணன்)



மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல இலச்சம் ரூபா பெறுமதியில் கல்லாறு மற்றும் காத்தான்குடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து இயங்காத நிலையில் உள்ளது இதனால் மீனவர்கள் தமது படகுகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்கு பல மையல் தூரம் சென்று பல்வேறு கஷ்டங்கள் மத்தியில் பெறவேண்டியுள்ளதாக மீனவர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி காலத்தில் மகிந்த ராஜபக்ஷவினால் தேசத்துக்கு மகுடம் திட்டத்தில் ஜ.நா. அபிவிருத்தி திட்டம் (யு.என்.டி.பி) நிதி அனுசரனையுடன் கிழக்கு மாகாணத்தில் கடற்கரை பகுதியில் 9 மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு மீனவர்கள் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டது

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு, மற்றும் காத்தான்குடியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை  மீனவர் சங்கங்கள்  தனியார்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி இயங்கி வந்தது.

இந்த நிலையில் குத்தகை அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை  பெற்றுக் கொண்டவர்கள் சிறிது காலம் செயல்படுத்திய பின்னர் அதனை செயல்படுத்த முடியாமல் அதனை நிறுத்தி விட்டு வெளியேறினர். அதனை தொடர்ந்து இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் நிரப்பு இயந்திரத்தின் மோட்டார்  உள்ளிட்ட பாகங்கள் திருடப்பட்டு கட்டிடம் பாழடைந்து எரிபொருள் நிரப்பு தாங்கிகள் உள்ளிட்ட பொருட்கள் துருப்பிடித்து மரங்கள் வளர்ந்து  காடுகள் போல காட்சியளிக்கிறது

அதேவேளை கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் கட்டிடத்தில் மதுபானம் அருந்துவபர்களின் இடமாக மாறியுள்ளதுடன் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இயந்திரங்களின் உதிரிபாகங்கள் திருடிச் செல்ல பட்டுள்ளதுடன் கட்டிடம் பாழடைந்து காட்சியளிக்கின்றது

இதனால் மீனவர்கள் தமது இயந்திர படகுகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்கு பல மையில் தூரம் சென்று பல்வேறு கஷ்டங்கள் மத்தியில் எரிபொருளை நிரப்பி கொண்டு வந்து தமது மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்

யு.என்.டி.பி  நிறுவனம் மீனவர்களுக்கு பல இலட்சம் ரூபா செலவில்  அன்பளிப்பு செய்து நிர்மானிக்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை சம்பந்தப்பட்ட  கடற்றொழில் திணைக்களம் இதுவரை காலமும் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? இவர்களுக்கும் வெளியில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்தார்களா?  இதனால் இதனை இயங்காமல் செய்தார்களா?  என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக வெறும் வெட்டிப் பேச்சுக்கள் பேசுவதை விடுத்து கடந்த 15 வருடங்களாக இயங்காது இருக்கும் இதனை இயங்க செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours