(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் (35ஆம் கிராமம்) பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக 56 பொதுமக்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, மீண்டுமொருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி, (25.11.2025)கண்ணபுரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழிகாட்டல் பெயர்ப்பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெல்லாவெளி பொலிஸாரின் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்ட இப்பணிகள், மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டன.
எனினும், அங்கிருந்த 56 பேரின் விபரங்களைச் சேகரித்த பொலிஸார், (11.12 .2025)அன்று அவர்களுக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு (30.04.2026) மூன்றாவது தடவையாக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதவான், வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி (04.06.2026) வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் அவசரக் கலந்துரையாடல்
நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மட்டக்களப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் அலுவலகத்தில் ஒன்றுகூடி விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இந்த வழக்கைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் மக்களின் பூர்வீக நில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பின்வரும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்.இரா.சாணக்கியன் ,போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர்வி. மதிமேனன், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர்த. கயசீலன் ,மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள். கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது எங்களுடைய
பூர்வீக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளைத் தொல்பொருள் அடையாளப்படுத்தல் என்ற போர்வையில் கையகப்படுத்த முற்படுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக மக்கள் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.





Post A Comment:
0 comments so far,add yours