போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை எல்லைக் கிராமங்களான மாலையர்கட்டு, பூச்சுக்கூடு, ராணமடு மற்றும் சங்கபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் நீண்டகாலமாக காட்டுயானைகளின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும், சின்னவத்தை வட்டார உறுப்பினர் காத்தமுத்து யோகராசா அவர்களின் முயற்சியினாலும், சமூகப்பற்றாளர்களின் நிதிப் பங்களிப்போடு புதிய தெருவிளக்குகள் மற்றும் மின்குமிழ்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
இதில் Maxta ரகத்தைச் சேர்ந்த மின்குமிழ் ஒன்று 1,400 ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்டு, அதனுடன் புதிய தெருவிளக்குகளும் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று (04.08.2026)ஆம் திகதி குறித்த கிராமங்களில் பழுதடைந்த மின்குமிழ்கள் மாற்றப்பட்டு, புதிய தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இவ்வேலைத்திட்டத்தினையும், காட்டுயானைகளின் அச்சுறுத்தலால் கிராம மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளையும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பிரதேசசபையின் உறுப்பினர் தெரிவிக்கையில்....
"எங்களது வட்டாரத்தில் நீண்டகாலமாக யானைத் தொல்லை இருந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய பிரதேச சபைச் செயலாளர் (சண்முகராஜா விஜிதராஜா) பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், எங்களது பகுதியின் நிலைமையை நேரில் பார்வையிட வருகை தந்துள்ளது வரவேற்புக்குரியது.
காட்டுப் பகுதிகளில் யானைகள் உலாவுவதால், கிராமங்களில் இருளைப் போக்க மின்விளக்குகள் அமைத்துத் தருவது அவசியமானது.
மாலையர்கட்டு, சின்னவாத்தை உள்ளிட்ட முழு வட்டாரமுமே யானைப் பாதிப்புக்குள்ளான பகுதியாகும்.
வரும் காலங்களிலும் உள்ளாட்சி மன்றமும் அதிகாரிகளும் மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடர வேண்டும்."
தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கும், தங்களின் நிலைமையை நேரில் வந்து பார்வையிட்ட பிரதேச சபைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், உதவி செய்த சமூகப்பற்றாளர்களுக்கும் அப்பகுதி கிராம மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
(ரஞ்சன்)









Post A Comment:
0 comments so far,add yours